×

பொன்னமராவதி வழியாக ரயில் இயக்க வேண்டும்

பொன்னமராவதி, செப். 21:   பொன்னமராவதி வழியாக ரயில் சேவை துவக்க வேண்டும் என வர்த்தகர் கழகம் வலியுறுத்தி உள்ளது.பொன்னமராவதி பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற இடங்களுக்கு சென்று தான் ரயிலில் ஏற வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ரயிலை சுற்றுலா சென்று தான் பார்க்க வேண்டி உள்ளது. இது குறித்து பொன்னமராவதி வர்த்தகர் கழக தலைவர் பழனியப்பன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று.  வர்த்தகர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில்  ரயில் சேவை இல்லாததால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு நீண்ட தூரம் சென்று  ரயில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

மேலும் சரக்கு ரயில் இருந்தால் எந்த பொருளையும் நேரடியாக கொள்முதல் செய்து இங்கு கொண்டு வந்து விடலாம். அது இல்லாமல் இருப்பதால் அதிக கட்டணம் கொடுத்து லாரி சர்வீசில் போட வேண்டியுள்ளது.எனவே இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்கு  புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றார். புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியாக மதுரைக்கும், திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக ராமேஸ்வரத்திற்கும் ரயில் சேவை தொடங்கி எளிதாக போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு