×

புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஊர்வலம்

புதுக்கோட்டை, செப். 21: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். ஊர்வலம் பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, தெற்கு 4ம் வீதி, மேலராஜவீதி வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்திற்கு வந்து நிறைவுபெற்றது. ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் ஓட்டுமொத்த தொகையை பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் 270 நாட்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.


Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா