சொகுசு காரில் மது கடத்திய 2 வாலிபர்கள் கைது

காலாப்பட்டு, செப். 21:  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு இசிஆர் சாலையில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இங்கு புதுவையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகு அனுப்பப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை, தலைமை காவலர்கள் ஆறுமுகம், உதயகதிர் ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் உள்ளே அதிகமாக அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை வெளியே எடுத்தபோது, அதனுள் 82 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

 இதையடுத்து, போலீசாரில் காரில் வந்த 2 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், ஆந்திராவை சேர்ந்த ராஜேஷ் (32), தெலுங்கானாவை சேர்ந்த வானசி (34) என்பதும், அவர்கள் இருவரும் புதுச்சேரியிலிருந்து மது கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, சோதனை சாவடி போலீசார் கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மரக்காணம் கலால்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், மது கடத்திய இருவர் மீது கலால்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: