ஆம்பூர், செப். 21: ஆம்பூர் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள்புரம் வெங்கடசமுத்திரம் காலனி. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நீர்வழி புறம்போக்கு கால்வாய் அருகே சுடுகாடு இடமாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தனியார் ஒருவர், அந்த இடங்களை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை கட்டியுள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் ஆம்பூர் தாலுகா அலுவலகம், பேரணாம்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில், சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆம்பூர் தாசில்தார் சுஜாதா, பேரணாம்பட்டு பிடிஓவுக்கு உத்தரவிட்டார். இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து கட்டுமான பணி நடந்து வந்தது.