திருச்சி, செப். 19: தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழலை கண்டித்தும், ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கே.என்.நேரு பேசியதாவது: இந்த ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். பாஜவுடன் திமுக ரகசிய உறவு இருக்கிறது என தம்பித்துரை பேசி வருகிறார். அதுமாதிரி எந்த உறவும் கிடையாது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை திருச்சி விமான நிலையத்தில் தம்பிதுரை சந்தித்து பேசினார். அதற்காக ஸ்டாலினுக்கும், தம்பிதுரைக்கும் உறவு இருக்கிறது என சொல்லாமா?
திமுக பக்கம் உள்ள சிறுபான்மை மக்களை திசை திருப்பவே இப்படி பேசி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக திமுக என்றும் இருக்கும். சிறுபான்மை மக்களுக்கு எதி ராக கூட்டணி அமைக்க மாட்டோம். பா.ஜவுடன் தொடர்பு படுத்தி ஒரு மாயையை ஏற் படுத்துகின்றனர். காவல்துறையை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டியே இன்றைய அரசு ஆட்சி நடத்துகிறது. காவல்துறையினரும், ஆட்சியாளர்கள் சொல்படியே செயல்படு கின்றனர். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக கொண்டு வர இந்த ஆர்ப்பாட்டம் மூலம் சபதம் ஏற்போம். இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.