திருச்சியில் 2 வீடுகளில் 37 பவுன் கொள்ளை

திருச்சி,செப்.19: திருச்சியில் 2 வீடுகளில் 37 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்பநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி எடமலைப்பட்டி புதுார் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் ரித்தின்ஜெல்சன்(25). தனியார் தொண்டு நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்டெசி. புதுமண தம்பதிகளான இவர்கள், கடலுார் சென்று இருந்தனர்.நேற்று தம்பதியினர் திருச்சி திரும்பிய போது அங்கு வீட்டு முன்பக்க கதவு பூட்டு உடைக்கப் பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. எடமலைப்பட்டி புதுார் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்திருச்சி கே.கே.நகர் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்(47). தனியார் நிறுவனத் தில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த அவர் பின்னர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.

பின்னர் இரவு வீடு திரும்பிய போது முன்பக்க இரும்பு கிரில் கேட் பூட்டு உடைக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்த 2பவுன் செயின் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: