புதுக்கோட்டை,செப்.19: புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச பஸ் பாஸ் உடனடியாக வழங்க வேண்டும். வகுப்பறைக்கு போதுமான மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கல்லூரி வளாகத்தில் அதிக அளவில் கொசு தொல்லை இருப்பதால், கொசு மருந்து அடிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிற்றுண்டியில் மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.