பொள்ளாச்சி, செப். 19: பொள்ளாச்சி ஊத்துக்காடுரோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில், துணை சபாநாயகர் கலந்து கொண்டு, அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி ஊத்துக்காடுரோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், பொள்ளாச்சி வாழ் இந்து நாடார் உறவின் முறையினர் சங்கம் சார்பில், சிறப்பு கொடைவிழா நேற்று முன்தினம் அதிக காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, பின் இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோயிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் ஏந்தி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின், காலை 8 மணிக்கு தெப்பக்குளம் வீதியில் உள்ள விநாயகர் கோயிலிருந்து முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அதன்பின், அம்மனுக்கு 21வகை அபிஷேக அலங்காரபூஜையும் நடந்தது. இதைதொடர்ந்து, பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு, அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கெங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் நித்தியானந்தன், முன்னாள் கவுன்சிலர் லிங்கபாண்டி, செந்தூர்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று 19ம் தேதி காலை 10மணியளவில் பத்ரகாளியம்மனுக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.