கோவை, செப். 19: அதிமுக ஊழல் அமைச்சர்கள் பதவி விலகக்கோரி கோவையில் நேற்று திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை மாவட்ட திமுக சார்பில் கோவை தெற்கு தாலுகாஅலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில், பங்கேற்ற திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாநகர திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்தகுமார், குப்புசாமி, குமரேசன், உமா மகேஸ்வரி, மாநகர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வீரகோபால், பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவிந்தராஜ், மார்க்கெட் மனோகரன், கோவை லோகு, வடவள்ளி சண்முகசுந்தரம், வக்கீல்கள் தண்டபாணி, அருள்மொழி, மயில்வாகனன், நிர்வாகிகள் சு.பார்த்தசாரதி, ரத்தினவேலு, அப்பாவு, முருகவேல், மகுடபதி, கோட்டை அப்பாஸ், திருமலைராஜா, மதனகோபால், முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், மாரிச்செல்வன், மாணவர் அணி வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
மதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் மோகன்குமார், சேதுபதி, வக்கீல் சூரி.நந்தகோபால், சற்குணம், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், த.பெ.தி.க சார்பில் கு.ராமகிருஷ்ணன், ஆறுச்சாமி, கொமதேக சார்பில் தனபால், வடிவேல், விடுதலை சிறுத்தைகள் சார்பில் சுசி.கலையரசன், இலக்கியன், ஆதி தமிழர் பேரவை சார்பில் ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஜிபுர்ரகுமான், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முகமதுரபீக் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் வி.பி.துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றுகிறது. ஆனால், அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலில் திளைக்கிறார்கள். குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் யார் யார் என சிபிஐ பட்டியல் தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக மறுக்கிறார்கள். இவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். லஞ்சம் கொடுத்தவரை கைது செய்கிறார்கள். ஆனால், வாங்கியவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். ஊழல் செய்து, சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்து, மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் அரசுப்பணிகளை மேற்கொள்ள, தமிழக முதல்வர், தனது குடும்பத்தினருக்கு டெண்டர் விட்டுள்ளார். இது அப்பட்டமான விதி மீறல். தமிழக மக்கள் இதை உணர்ந்து, இந்த ஆட்சியை அகற்றிவிட்டு, திமுகவை ஆட்சியில் அமர்த்தும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வாறு வி.பி.துரைசாமி கூறினார்.