திருமங்கலம், செப்.19: பொன்னமங்கலத்தில் உள்ள துணை சுகாதாரநிலைய கட்டிடம் நாளுக்குநாள் சேதமடைந்து வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்துள்ள பொன்னமங்கலம் கிராமத்தில் துணை சுகாதாரநிலையம் அமைந்துள்ளது. சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இந்த துணை சுகாதாரநிலையத்தின் கீழ் பொன்னமங்கலம், மேலேந்தல், முத்துபெருமாள்பட்டி, முத்தையாபுரம், வீரம்பட்டி, சித்தாலை, முத்துகிருஷ்ணாபுரம், புங்கன்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு திங்கள்கிழமைகளில் கொசுமருந்து தெளிப்பு, புதன்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளும் வழங்கப்படுகிறது.