மதுரை, செப்.19: கஞ்சா விற்பனை தொடர்பாக 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை தபால் தந்திநகர் செக்போஸ்ட் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த சாக்ஷன் சாமுவேல்(20), ஆகாஷ்(20) என்ற இரண்டு மாணவர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 4 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடத்தினர். இதில், 32 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இதில், தனியார் விடுதியில் தாராளமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த மேலும் 5 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவான பிரேம்குமார் என்ற மாணவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.