குடிநீர் கோரி மாநகராட்சி முற்றுகை : நத்தம் அருகேயும் சாலைமறியல்

திண்டுக்கல், செப். 19: குடிநீர் கோரி திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகத்தை 1வது வார்டு பெண்கள் முற்றுகையிட்டனர். நத்தம் அருகேயும் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டுக்குட்பட்டது அய்யன்குளம், கருணாநிதிநகர், முருகபவனம். சுமார் 2000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த இப்பகுதி பெண்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே பெண்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘விரைவில் எங்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவோம்’’ என்றனர்.நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்டது பூசாரிபட்டி. இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் நத்தம் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் நத்தம் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: