வத்தலக்குண்டு, செப். 19: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டியில் கண்மாய் உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த கண்மாயில் புதர்மண்டி கிடந்தது. இதனால் கண்மாயில் போதிய நீரை தேக்க முடியவில்லை. பாசனநீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வந்தனர்.இந்நிலையில் கணவாய்பட்டியை தத்து எடுத்த வத்தலக்குண்டு ரோட்டரி சங்கத்தினர், இந்த கண்மாயை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்தனர்.
அதன்படி பொக்லைன் இயந்திரம் மூலம் கண்மாயில் 3 நாட்கள் தூர்வாரும் பணி நடந்தது. இப்பணி துவக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைஆளுநர் ராஜ்குமார், செயலாளர் செனார்டு கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் செயலாளர்கள் முருகேசபாண்டியன், சதீஸ்குமார், பத்ரிநாராயணன், ராஜயோக்கியம், சித்திக், ஊராட்சி செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.