திருபுவனை, செப். 19: மதகடிப்பட்டு அருகே காமராஜர் கலைக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பத்தில் காமராஜர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதலாண்டு பட்டப்படிப்பில் 260 இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இதில் சென்டாக் மூலம் 3 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு 225 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 4ம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு மீதமுள்ள 35 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான சேர்க்கை நேற்று நடைபெற்றது. ஆனால் 95 மாணவர்கள் வந்திருந்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் இவர்களுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து மாணவர்கள் தங்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும் எனக்கூறி கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கல்லூரி எதிரே மதகடிப்பட்டு- திருக்கனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.