கடையம், செப்.19: ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள கல்யாணிபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் அருள்செல்வம் மனைவி ஞானமுத்து (34). இவரது மகன் மரியதாஸ் (14). அங்குள்ள செட்டிகுளம் தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 13ம் தேதி காய்ச்சல் அடித்தது. இதையடுத்து பொட்டல்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்தவுடன் மரியதாசுக்கு வலது தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தொடர்ந்து மரியதாஸ் ஆவுடையானூரில் ஸ்கேன் எடுத்து வீட்டுக்கு திரும்பிய போது மூச்சு திணறல் மேலும் அதிகமானது. இதையடுத்து கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மரியதாஸ் இறந்தார். பிரேத பரிசோதனைக்காக உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.