நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு, குட்கா ஊழல் அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு, குட்கா ஊழலை கண்டித்து சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், உதயநிதி ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதிமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், அதில் சிக்கிய முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

* சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், கந்தன்சாவடியில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், திமுக பொருளாளர் துரைமுருகன்  கலந்து கொண்டு உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர் மற்றும் பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், தனசேகரன், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரை.கபிலன், பகுதி செயலாளர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், வட்ட செயலாளர்கள் ஏகாம்பரம், ரமேஷ், உமாபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், தாம்பரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆதிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் செம்பாக்கம் சுரேஷ், வ.க.ரவி, இந்திரன், செல்வகுமார், ஜோதிகுமார் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

*  சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ரங்கநாதன், தாயகம் கவி, பிரசன்னா, அவைத்தலைவர் ஏகப்பன், பொருளாளர் ஆசாத், பகுதி செயலாளர்கள் ஜோசப் சாமுவேல், முரளி, தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, விஜயகுமார், வேலு, கூபி ஜெயின், வாசு, சதீஸ்குமார், தேவ ஜவஹர், மகேஷ்குமார், விஜய், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

* சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கதில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மு.க.தமிழரசு, ரகுமான்கான், பூச்சி முருகன், எம்.எல்.ஏ.க்கள் கு.க.செல்வம், எம்.கே.மோகன், பகுதி செயலாளர்கள் மதன், காமராஜ், ராமலிங்கம், அன்புதுரை, கருணாநிதி, கே.எஸ்.மணி, பரமசிவம், அகஸ்டின், மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.மோகன், சிதம்பரம், கண்ணன், ராஜ்குமார், வி.எஸ்.ராஜ், நுங்கை சுரேஷ், மீனவர் அணி நிர்வாகிகள் தம்பிதுரை, சிறுபான்மையினர் நல அணி ரகமதுல்லா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

* வட சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். கட்சியின் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி, ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில், உதயநிதி ஸ்டாலின், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முஸ்லிம் லீக் வடசென்னை மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன், முன்னாள் பகுதி செயலாளர் மருதுகணேஷ், ஏ.வி.ஆறுமுகம், குறிஞ்சி கணேசன் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு அதிமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

மானம் இருந்தால் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்: - துரைமுருகன் ஆவேசம்

கந்தன்சவாடியில் நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் கலந்து கொண்டு பேசியதாவது: இப்போது நடக்கும் அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி. என்னை பார்க்கிறவர்கள் ‘சவுக்கியமா?’ என கேட்பார்கள். ஆனால் தற்போது, ‘ஆட்சி எப்போது போகும்’ என கேட்கிறார்கள்.  தற்போது மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் வளமாக உள்ளனர். இந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. வடசென்னை, மத்திய சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், தென்சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. இதற்கு காரணம், கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு தினமும் 100 டிஎம்சி தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

குட்கா ஊழலில் டிஜிபி, அமைச்சர் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் யார் எல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று பெயருடன் சொன்னார். ஆனால், இதுவரையில் யாரும் எங்கள் மீது வீண் பழி சொல்வதாக நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தைரியமாக சொல்லவில்லை. எடப்பாடிக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மானம் உள்ளவராக இருந்தால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ராஜினாமா செய்துவிட்டால், வருமானம் இருக்காது. மானமா? வருமானமா? என்று பார்த்து, வருமானம்தான் பெரியது என்று முடிவெடுத்து ராஜினாமா செய்யாமல் உள்ளார்.

தற்போது, அமைச்சர்கள் போட்டி போட்டு சம்பாதித்து வருகின்றனர். மற்ற அமைச்சர்கள் தவறை செய்தால் முதல்வர் தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் முதல்வரே தவறு செய்தால் என்ன செய்வது? கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு அமைச்சர் குற்றச்சாட்டு எழுந்ததால் மறுநாள் வீட்டு அனுப்பிவிட்டார்.  இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர், துணை முதல்வர், அனைவருமே ஊழல்வாதிகள்: - தயாநிதி மாறன் பேச்சு

குட்கா ஊழலில் சிக்கிய அதிமுக அரசு பதவி விலக கோரி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது: அதிமுக ஆட்சியாளர்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். ரோடு, பாலம் கட்டியதாக கூறி கொள்ளை அடிக்கிறார்கள். குட்கா சாப்பிட்டால் அடுத்த தலைமுறை அழியும் என்று நீதிமன்றம் அதை தடை செய்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் அதை திருட்டுத்தனமாக விற்கிறார்கள். இதற்காக கைது செய்யப்பட்டவர் யார், யாருக்கு எல்லாம் மாமூல் கொடுத்தேன் என்று பட்டியலில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும், டிஜிபி பெயரும் இடம்பெற்றுள்ளது. குட்காவை சட்டமன்றத்தில் காட்டியது குற்றம் என்று கூறினார்கள். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டரீதியாக நீதிமன்றம் சென்று இன்று அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் வழக்கு போட்டிருக்கிறார். முதல்வர் அதை பற்றி பேச மறுக்கிறார். ஏனென்றால், அவர் மீது வழக்கு இருக்கிறது. டிஜிபி மீதும் வழக்கு நடக்கிறது.

இன்று முதல்வர், துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி என்று அனைவரும் ஊழல்வாதியாக இருக்கிறார்கள். எனவே, இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். இவர்கள் தலைவியே குற்றம் செய்து விட்டு ஜெயிலுக்கு சென்றவர்தான். தமிழ்நாட்டை பிடித்த தரித்திரம் அகல மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய வேண்டும். அதுவரை நமது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: