வறண்ட கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க்!

நன்றி குங்குமம் தோழி

 

பொதுவாக, கூந்தலில் ஏற்படும் பிரச்னைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருட்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதிலும், இயற்கை பொருட்களை பயன்படுத்தும்போது, இன்னும் பலன் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் கட்டுக்கடங்காமல்  இருக்கும் வறண்ட கூந்தலுக்கு  வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தினால்,  கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும். ஒரு முறை பயன்படுத்தினாலே பலன் நன்றாக கிடைக்கும்.

வாழைப் பழ  மாஸ்க் தயாரிக்க:

தேவையானவை

நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1

தயிர் - 1 மேசைக்கரண்டி

தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி

சுத்தமான ஆலிவ் அல்லது தேங்காய்

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கற்றாழை சாறு - தேவைக்கேற்ப.

செய்முறை: முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். கைகளால் மசித்தாலும் போதும் பிறகு அதனுடன் கெட்டித்தயிர், திக்கான தேங்காய்ப்பால், ஆலிவ் எண்ணெய், கற்றாழைச் சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.  இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வந்துவிடும். பிறகு இதனை  பயன்படுத்தலாம். இந்த பேக்கை  பயன்படுத்துவதற்கு முன்பு, தலைகுளித்து  கூந்தலை  அழுக்கில்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  பின்னர்,  மாஸ்கை பயன்படுத்த வேண்டும். பிறகு முடியை சிறிது சிறிதாகப் பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு நிதானமாக தடவ வேண்டும். முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.

பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் (அதிக கெமிக்கல் இல்லாத) பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும். முடி உயிரூட்டம் பெறுவதால் கூந்தல் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்னைகள் இருந்தாலும் நீங்கிவிடும். தேங்காய்ப்பால் கூந்தலுக்கு தனி பொலிவையும் மினுமினுப்பையும் தரக்கூடியது. எனவே, கூந்தலின் வறட்சியை மீட்டுவிடலாம்.

தொகுப்பு : ரிஷி

Related Stories: