தா.பேட்டை, செப்.19: முசிறியில் ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சித்த மருத்துவர்கள் பெரியசாமி, விவேகானந்தன், கோசிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சித்த மருத்துவர்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் அழிந்துவரும் பனைமரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய சித்த மருத்துவத்தில் லேகியம் செய்வதற்கு பயன்படும் முதன்மை துணைப் பொருளான கருப்பட்டி (பனை வெல்லம்) தரமானதாகவும், நியாயமான விலையில் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ குணமுள்ள நீரா பானத்தை பனை தொழிலாளர்கள் இறக்கி பொதுமக்களுக்கு விற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.