பழநி, செப். 18: பழநியில் மாநில அளவிலான மகளிருக்கான பளுதூக்கும் போட்டியில் சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் சார்பில் பழநியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில அளவிலான மகளிருக்கான பளுதூக்கும் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, மதுரை, விருதுநகர் உட்பட 25 மாவட்டங்களைச் சேர்ந்த 125க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதி போட்டியில் சேலம் அணி 256 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.நாகப்பட்டிணம் அணி 219 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், தூத்துக்குடி அணி 166 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பழநி சப்.கலெக்டர் அருண்ராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்டோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை அமெச்சூர் பளுதூக்கும் சங்க நிர்வாகி நாகவடிவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.