ஒட்டன்சத்திரம், செப். 18: ஒட்டன்சத்திரத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 18வது வார்டுக்குட்பட்டது குறிஞ்சிநகர். இங்கு 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை உரிய பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவுநேரங்களில் டூவீலர்களில் வருவோர் தவறி விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது.இங்குள்ள தனியார் பள்ளி நுழைவாயில் முன்புள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த பள்ளத்தால் கனரக வாகனங்களே தடுமாறி செல்கின்றன. எனவே பெரிய விபத்து ஏதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.