திருக்கனூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருக்கனூர், செப். 18: சுத்துக்கேணி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள சுத்துக்கேணி பகுதியில் கடந்த 13ம்தேதி அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே தெருவில் வசிக்கும் கனகராஜ் (23) என்ற வாலிபர் சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றாராம். பின்னர் அங்கு அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தம் போட்டதும் கனகராஜ், சிறுமியிடம் இதுபற்றி வீட்டில் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு தப்பியோடி விட்டார். சிறிதுநேரம் கழித்து சிறுமியை தேடி வந்த அவரது தாயார், தனது மகள் சோர்வாக இருப்பதை பார்த்து விசாரித்துள்ளார். பின்னர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்து காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காட்டேரிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தைகள் நலக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கனகராஜை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் சுத்துக்கேணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: