தனித்தனி விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலி

திருவெண்ணெய்நல்லூர், செப். 18:    தனித்தனி விபத்து சம்பவத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பெரம்பலூரை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் (28). இவரது மாமியார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக சத்தியபிரகாஷ், அவரது மனைவி பிரபா (21), சத்தியபிரகாசின் தந்தை நடராஜன்(56). தாயார் சாந்தி(50), தம்பி மதியழகன்(23), உறவினர் ராணி(54) ஆகியோர் ஒரு காரில் சென்னைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சத்தியபிரகாஷ் ஓட்டி வந்துள்ளார்.  நள்ளிரவு 11.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் அய்யனார் கோயில் அருகே கார் வந்தபோது, முன்னால் சென்ற டாரஸ் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த நடராஜன் உள்ளிட்ட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  சிறுமி பலி: சின்னசேலம் அருகே சொரக்காபாளையத்தைச் சேர்ந்தவர் அமானுல்லா(38). இவர் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் இவர் தனது பைக்கில் மனைவி சகாப்பானு(30), மகன் முகமதுபர்கான்(11), மகள் மிஸ்பா(8) ஆகியோருடன் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் சென்று விட்டு ஊக்கு திரும்பினார். சின்னசேலம் அருகே பேக்காடு என்ற இடம் அருகே, எதிரே டவுன் பஸ் வந்தது. அப்போது சாலையோரமாக ஒதுங்கியபோது, பைக் சாலையில் கவிழ்ந்தது. இதில் 4 பேரும் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர். இதில் சிறுமி மிஸ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: