திருச்செந்தூர், செப். 18: தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கல்யாணராமன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். டாக்பியா மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் பேசினார். தீர்மானங்கள்: விவசாய கடன் அட்டை வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும். வேளாண் கடன்களுக்கு உரம் வழங்க மத்திய கூட்டுறவு வங்கிகளால் கட்டாயப்படுத்துதலை கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் சிறு வணிக கடனை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஜேசுராஜன், ஜெயபிரகாஷ், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், பால்ராஜ், செல்லத்துரை, குமரி மாவட்ட நிர்வாகிகள் சகாயதிலகராஜ், கிருஷ்ணன், சுவாமிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ஜவகர் நன்றி கூறினார்.