குடியாத்தம், செப். 18: குடியாத்தம் அருகே அணையில் மீன் பிடித்தபோது யானை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(60), விவசாயி. இவர், கடந்த 11ம் தேதி காலை மோர்தானா அணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒற்றை ஆண் யானை கோவிந்தசாமியை தும்பிக்கையால் தாக்கி, தூக்கி வீசியது.
இதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சத்தம் கேட்டு அருகே விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து கோவிந்தசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.