சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகை: அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம், செப்.18: அரக்கோணம் அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும், பணம் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மின்னல் ஊராட்சி அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று மின்னல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் பிடிஓ ராமசேகர குப்தா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வார காலத்திற்குள்ளாக அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: