பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து எச்.ராஜாவின் பேச்சு மக்களை திசை திருப்பும் செயல்: இந்திய கம்யூ. மத்திய குழு உறுப்பினர் பேட்டி

வேலூர், செப்.18: பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து மக்களை திசை திருப்பவே எச்.ராஜா பேசி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரசார பேரியக்கம் சார்பில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அருகே தொடங்கிய பிரசார பேரணியை தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார். பேரணி அண்ணா கலையரங்கம் அருகில் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரசார பேரணி வரும் 23ம் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் திருப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறையை அவதூறாக எச்.ராஜா பேசியுள்ளார். இந்த மோசடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறியடிக்கும். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு போன்ற காரணங்களால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் பாஜ அழிந்து விடும். இந்த அச்சத்திலேயே எச்.ராஜா, தமிழிசை போன்றவர்கள் இதுபோன்று பேசி பிரச்னையை திசை திருப்பி விடுகின்றனர். இதை தமிழக மக்கள் முறியடிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: