பூந்தமல்லி: மதுரவாயல் அருகே ரவுடியை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) புறாமணி (21). இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் கடந்த 13ம் தேதி மதுரவாயலை அடுத்த வானகரம், மீன் மார்க்கெட் அருகே உள்ள காலி மைதானத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். சந்தேகத்தின் பெயரில் விக்கி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர் பகுதியில் பதுங்கிய கொலையாளிகள் நெற்குன்றத்தை சேர்ந்த சுல்தான்(23), நாகராஜ் (எ) நாடி நாகராஜ் (20), மதுரவாயலை சேர்ந்த அரவிந்த் (23), காட்டுப்பாக்கத்தை சேர்ந்த அருண் (25), வளசரவாக்கத்தை சேர்ந்த ஆனந்தன் (எ) கோழி பாபு (25), ஆகிய 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள தக்காளி பிரபா என்பவருக்கும், நேதாஜி என்பவருக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்து வந்துள்ளது. இதனால் இரு கோஷ்டிகளுக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கோஷ்டியினரும் அடித்துக்கொண்டனர். தக்காளி பிரபா கைதாவதற்கு நேதாஜி முக்கிய காரனமாக இருந்துள்ளார். மேலும், தக்காளி பிரபா ஆட்கள் செய்யும் குற்ற சம்பவங்களை போலீசிடம் கூறி விடுவார். இதனால் நேதாஜியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் இந்த கும்பலை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனை முதலில் தீர்த்துக்கட்ட முடிவு செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். மணிகண்டன் அங்கு வந்ததும் மறைந்திருந்த 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.