3,150 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

செஞ்சி, செப். 12: செஞ்சி அருகே உள்ள அவலூர்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை கொடிகட்டி பறப்பதாக சென்னை நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் அவலூர்பேட்டையில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது சின்னசாமி என்பவர் நிலத்தில் 387 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13,545 லிட்டர் எரி சாராயம் கைப்பற்றப்பட்டது. இதேபோல் செஞ்சி காலால் இன்ஸ்பெக்டர்கள் ரேணுகாதேவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அவலூர்பேட்டை ஏரிக்கரையில் ரெய்டு நடத்தினர். அப்போது 88 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் செஞ்சி கலால் போலீசார் அவலூர்பேட்டை பகுதியில் உள்ள சின்னசாமி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 90 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,150 லிட்டர் எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து சாராய வியாபாரிகள் களையூர் ராமச்சந்திரன், அவலூர்பேட்டை லோகநாதன், கணேசன் ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவலூர்பேட்டையில் மேலும் சில இடங்களில் சாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் அதிரடி சோதனை தொடர உள்ளனர்.

Related Stories: