ஆட்டையாம்பட்டி, செப்.12: ஆட்டையாம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்செங்கோட்டில் நடைபெறும் அதிமுக பிரமுகரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். திருச்செங்கோடு செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டி பகுதியான நைனாம்பட்டி, போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என 3 இடங்களில் அதிமுகவினர் திரண்டு வந்து முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதில் வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி, ஒன்றிய செயலாளர் வருதராஜ், நகர செயலாளர் சுப்பிரமணி, ராஜபாளையம் முன்னாள் தலைவர் சிவக்குமார், அரியானூர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.