ஓமலூரில் ஆலோசனை கூட்டம் ெபாதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம்

சேலம், செப்.12: சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் வந்தடைந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்த அவருக்கு, காமலாபுரம் விமான நிலையத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ ஆகியோரது தலைமையில், சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல், மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ரோகிணி, பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றார். ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கென தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்பி, மாவட்ட செயலாளர் ெவங்கடாசலம் எம்எல்ஏ, மாணவரணி செயலாளர் சக்திவேல் எம்எல்ஏ மற்றும் பகுதி செயலாளர்கள், 60 வட்ட ெசயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை மொத்தமாக வழங்காமல், வாக்காளர்களையே நேரடியாக அழைத்து சென்று, வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு, வீடாக நேரடியாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும். மாவட்டத்தில், குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, அடிப்படை வசதிகள் குறித்து வரும் புகார்களுக்கு, முக்கியத்துவம் அளித்து அதனை சீரமைக்க வேண்டும். நாடாளுமன்றம், உள்ளாட்சி என எந்த தேர்தல் வந்தாலும், அதில் நாம் வெற்றி பெற வேண்டும். மேலும், புதிய உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்த வேண்டும்,’ என்றார்.

இதனை தொடர்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, கார் மூலம் திருச்செங்கோடு புறப்பட்டு சென்றார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர், பின்னர் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். முதல்வரின் வருகையையொட்டி சேலம் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Related Stories: