கோவை, செப்.12: விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை நேற்று கோவையில் விறுவிறுப்பாக நடந்தது. விநாயகர் சதுர்த்தி நாளை (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் நேற்று பூ மார்க்கெட், குமரன் மார்க்கெட், உக்கடம் மார்க்கெட் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் அலைமோதினர். அங்கு விநாயகர் சிலை அரை அடி அளவு ரூ.60க்கும், 3 அடி விநாயகர் சிலை ரூ.1,600க்கும் விற்கப்பட்டது. விநாயகர் சிலைக்கான அலங்கார குடை ரூ.30 முதல் ரூ.60க்கும், வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30க்கும், எருக்கம்பூ மாலை ஒரு ஜோடி ரூ.20 முதல் ரூ.30க்கும், அருகம்புல் கட்டு மற்றும் மாவிலை கட்டு தலா ரூ.20க்கும், வெற்றிலை 100 எண்ணிக்கை ரூ.60க்கும் விற்கப்பட்டது. இது கடந்த ஆண்டு விலையை விட அதிகமாகும்.சுண்டல், கொழுக்கட்டை ஆகிய படையல் பொருட்கள் செய்ய தேவையான கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், கடலை பருப்பு மற்றும் இதர படையல் பொருட்களான பொரி, கடலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றின் விலையும் வழக்கமான விலையை விட உயர்ந்தது. பூஜை மற்றும் படையல் பொருட்களின் விற்பனை இன்றும் அதிகரிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.