அடிப்படை வசதி கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

பவானி,செப்.12:  பவானி தாலுகா, ஜம்பை பேரூராட்சி, பெருமாபாளையம் புதூர் கரடு பகுதியில்  குடிநீர், தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி  அப்பகுதி மக்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் கருப்புசாமி தலைமையில் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு விவரம்: பெருமாபாளையம்  புதூர் கரடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர்.  அனைவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இப்பகுதிக்கு பொது  குடிநீர் குழாய் இல்லை. எனவே, குடிநீர் தேவைக்காக நீண்ட தூரம் சென்று  வரக்கூடிய நிலையுள்ளது. எனவே, மக்கள் குடியிருப்பு பகுதியில் 3 இடங்களில்  பொது குடிநீர் இணைப்பு அமைக்கவேண்டும்.  மேலும், முறையான தெருவிளக்கு  இல்லாததால் இரவு நேரத்தில் பெரும் சிரமம் நிலவி வருகிறது. எனவே, ஏற்கெனவே  உள்ள இரண்டு கம்பங்களில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். போர் தண்ணீர்  உள்ள சின்டெக் தொட்டியிலிருந்து வரும் உபரிநீர் வெளியேறாமல் தேங்கி  நிற்கிறது.எனவே, நடைபாதையில் தண்ணீர் தேங்காத வகையில் மராமத்து செய்ய  வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.   விவசாயத் தொழிலாளர்  சங்கத்தின் பவானி தாலுகா தலைவர் ரவீந்திரன், உறுப்பினர் குப்பன் மற்றும்  பொதுமக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: