தூத்துக்குடி, செப். 12: வடக்கு கல்மேடு பகுதியில் உள்ள கண்மாயை மீட்டு தரும்படி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா, வடக்கு கல்மேடு ஊர் மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள மனு: எங்கள் ஊரில் உள்ள வடக்கு கல்மேடு கண்மாய் மொத்தம் 74 ஏக்கர் பரப்பளவு உள்ளது. தற்போது 20 ஏக்கர் நிலம் மட்டும் மிஞ்சியுள்ளது. வருவாய்துறை பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால், சம்மாங்குளம் என்ற வடக்குகல்மேடு கால்வாயின் பரபரப்பு ஆக்கிரமிப்புகள் காரணமாக நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது.
அடுத்த தலைமுறைக்கு கண்மாய் என்ற ஒன்று இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நீர்பிடிப்புகளை சட்ட விரோதமாக ஆக்ரமித்துள்ள தனியார் பிடியில் இருந்தும் விலை போகும் அதிகாரிகள் பிடியில் இருந்தும் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.