திருச்செந்தூர்: திருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன்பட்டினம் மாடோனா தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (35). கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி பேச்சியம்மாள், மாமியார் லட்சுமி மற்றும் 4 வயது குழந்தை சேது லட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினருடன் கடந்த 9ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலில் சேதுலட்சுமி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகை திருடுபோனது. திருச்செந்தூர் கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி நடத்திய விசாரணையில் ஆறுமுகநேரி பாரதி நகர் நடராஜர் தெருவைச் சேர்ந்த முத்தையா மனைவி பலவேசம் (54), இதில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், நகையையும் மீட்டனர்.