பொது வழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கொலை மிரட்டல்

சேலம், செப்.11: சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில், பனமரத்துப்பட்டியை அடுத்த தும்பல்பட்டி காட்டுகொட்டாயைச் சேர்ந்த விவசாய சகோதரர்கள் செங்கோடன், ஜெயபால், மாரிமுத்து மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் தங்களது மனைவிகளுடன் வந்து மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பூர்வீக விவசாய நிலத்தில் பாக்கு, தென்னை, அரளி பூ உள்ளிட்டவற்றை பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறோம். வீட்டிற்கும், விவசாய தோட்டத்திற்கும் ெசல்ல அங்குள்ள 12 அடி பொது வழித்தடத்தை பயன்படுத்தி வந்தோம். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த வழித்தடத்தை ஆக்கிரமித்து கம்பி வேலியிட்டார். இதனால், விவசாய பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல், வெளியில் செல்லும் குழந்தைகளும் பரிதவிப்பிற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து கேட்டபோது, சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரது மகன்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர். போலீசில் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட நபர் அமைச்சர் வேலுமணியின் உதவியாளருக்கு உறவினர் என, கூறி நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கம்பி வேலியை அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Related Stories: