10 மாத நிலுவை தொகை வழங்க ேகாரி ஆஷா பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி,செப்.11: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு 10 மாதமாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏஐடியுசி., ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆரி தலைமையில் ஆஷா பணியாளர்கள் கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 19 வகையான பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், இது நாள் வரையில், அரசு நிர்ணயம் செய்த ஊக்கத்தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடன் பல முறை முறையிட்டோம். ஆஷா பணியாளர்கள் ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த உதவித் தொகை வழங்கப்படாத நிலையில், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த கடந்த ஜூன்1ம் தேதி சென்னை சுகாதார துறை இயக்குநர், நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.67.18 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்துள்ளார். ஆனால், இது வரை எங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. ஊக்கத் தொகை வழங்கப்டாத காரணத்தால் அடிக்கடி ஊட்டியில் நடக்கும் கூட்டத்திற்கு செல்ல முடிவதில்லை. அதனையும் மீறி செல்ல வேண்டுமாயின், நாங்கள் கடன் வாங்கியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஆஷா பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 10 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு சலுகையாக அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வீடு தோறும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இதுவும் வழங்கப்படாமல் உள்ளது. இதனையும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆஷா பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: