ஊட்டி,செப்.11: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு 10 மாதமாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏஐடியுசி., ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆரி தலைமையில் ஆஷா பணியாளர்கள் கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 19 வகையான பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், இது நாள் வரையில், அரசு நிர்ணயம் செய்த ஊக்கத்தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடன் பல முறை முறையிட்டோம். ஆஷா பணியாளர்கள் ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த உதவித் தொகை வழங்கப்படாத நிலையில், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.