×

குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா

நன்றி குங்குமம் தோழி
   
குழந்தைகளின் சருமம்

பட்டு போல் மிருதுவானது. அவர்களின் சருமத்தை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் குழந்தைகளுக்கு என குறிப்பிட்ட ஒரு சில பிராண்ட்கள் மட்டும்தான் உள்ளன. அதைத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதிலேயும் சில கலப்படம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்படி இல்லாமல் குழந்தைகளுக்கு பிரத்யேகமான பல ஆய்வுகள் செய்து அவர்களின் சரும பராமரிப்பு பாடி வாஷ், பாடி லோஷன், மசாஜ் எண்ணெய் போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளார் பூனாவைச் சேர்ந்த ஆகன்ஷா. இவர் தன் தாயுடன் இணைந்து ‘சிடா’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான சரும பராமரிப்பு பொருட்களை வழங்கி வருகிறார். இதில் உள்ள ஆன்டி மைக்ரோபயல் தன்மை குழந்தையின் சருமத்தை ஈரப்பதம் நிறைந்ததாகவும், பட்டு போல் மிருதுவாக இருக்கவும் உதவுகிறது.

‘‘நான் பிறந்தது படிச்சது எல்லாம் பூனாவில். என் குடும்பம் கல்வி நிறுவனங்கள், பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்கள். சின்ன வயசில் இருந்தே ெதாழில் சார்ந்த விஷயங்களை பார்த்து வளர்ந்ததால் எனக்கும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் அமெரிக்காவில் டிசைன் மற்றும் மேனேஜ்மென்ட் குறித்து படிச்சேன். அதன் பிறகு இங்கு வந்தவுடன் சில காலம் குடும்ப தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அதன் மூலம் ஒரு நிறுவனத்தை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு என்னுடைய குடும்ப தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இல்லை. எனக்கான ஒரு எதிர்காலம் இருந்தாலும், நான் தனிப்பட்டு தெரிய வேண்டும்னு விரும்பினேன்.

அப்பதான் என் அம்மாவுடன் சேர்ந்து ஏன் ஒரு தொழிலில் ஈடுபடக்கூடாதுன்னு எனக்கு தோணுச்சு. அம்மா காஸ்மெட்டாலஜிஸ்ட். கல்யாணத்திற்கு பிறகு அவங்க பிராக்டீஸ் செய்யல. அவங்களும் குடும்ப பிசினசை கவனிச்சிக்கிட்டாங்க... நேரம் கிடைக்கல. நான் வீட்டில் சொன்ன போது, அப்பா நீயும் அம்மாவும் சேர்ந்து செய்யுங்கன்னு சொன்னார். எனக்கு காஸ்மெடிக் பத்தி தெரியாது. ஆனால் மார்க்கெட் செய்ய தெரியும். அம்மாவுக்கு பொருளை உருவாக்க தெரியும். அப்படித்தான் ‘சிடா’ உருவாச்சு’’ என்றவர் அதன் பயணம் பற்றி விவரித்தார்.

‘‘நான் அமெரிக்காவில் படிக்கும் போது தான் குழந்தைகளுக்கான காஸ்மெடிக் நிறுவனம் குறித்த சர்ச்சை ஏற்பட்டது. அப்போது தான் நாம் ஏன் நம் பாரம்பரியம் மாறாமல், குழந்தைகளுக்கான ஒரு காஸ்மெட்டிக் பொருட்களை அறிமுகம் செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அப்ப நான் விடுமுறைக்காக பூனா வந்திருந்த போது வீட்டில் இது குறித்து டிஸ்கஸ் செய்தோம். அதில் குறிப்பா நம்ம பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய முறை மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தோம்.

அந்த காலத்தில் இது போன்ற காஸ்மெடிக்ஸ் கிடையாது. வீட்டில் உள்ள தேங்காய் எண்ணெய், வெண்ணெய், மஞ்சள் போன்ற ஆயுர்வேதத்தினைதான் நாம் பயன்படுத்தி வந்தோம். அதையே இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப கொடுக்க திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் தான் எங்க நிறுவனத்திற்கும் ‘சிடா’ என்று பெயர் வைத்தோம். சிடா என்றால் சமஸ்
கிருதத்தில் ‘சித்’ என்று அர்த்தம். அதாவது நம்முடைய உணர்வு.

முதலில் நாங்க தயார் செய்தது குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய்தான். அதனால் எந்த ஊர்களில் என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தோம். தமிழகத்தில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் பயன்படுத்துகிறார்கள். மகாராஷ்டிரா ெபாறுத்தவரை நல்லெண்ணெய் மட்டும்தான் உபயோகிக்கிறார்கள்.

இதை மனதில் கொண்டு ஒரு மசாஜ் எண்ணெயை தயாரித்தோம். அதில் சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், மஞ்சள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், அஸ்வகந்தா எண்ணெய், கற்பூர எண்ணெய், பாஹமி எண்ணெய், பேசில்  எண்ணெய், பட்டை எண்ணெய் என 12 வகையான எண்ணெய்கள் குறித்து ஆய்வு செய்து குழந்தைக்கான ஒரு மசாஜ் எண்ணெயினை கண்டறிந்தோம். இவ்வளவு எண்ணெய்களை பயன்படுத்தினால் குழந்தையின் உடல் நலம் பாதிக்காதா என்று கேட்கலாம்.

இந்த எண்ணெய்கள் எல்லாம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்த பிறகு தான் ஒரு ஃபார்முலாவை அடைந்தோம். இந்த அளவில் சின்ன மாற்றம் ஏற்பட்டால் தான் ரியாக்டாகும். மேலும் எல்லா எண்ணெயும் ஒரே அளவில் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு எண்ணெய்களின் விகிதங்கள் மாறுபடும். அதிலும் குறிப்பாக எசன்ஷியல் எண்ணெய்கள். இவை அரோமா தெரபிக்கு பயன்படுத்துவார்கள். மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதால், இதனை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது மிக மிகச் சிறிய அளவில் தான் சேர்க்கணும்.

இது தவிர குழந்தைகளுக்கான மாய்சரைசிங் கிரீமும் தயாரிக்கிறோம். இதில் ஷியா பட்டர், விட்டமின் ஈ எண்ணெய், தேங்காய் எண்ணெய், ரைஸ் பார்ன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், பேசில் எண்ணெய், மஞ்சள் எண்ணெய் மற்றும் கற்பூர எண்ணெய் என ஏழு வகையான எண்ணெய்களை கலந்திருக்கிறோம். சருமத்தில் தடவும் போது பிசுபிசுவென்று ஒட்டாது, சருமத்தை வளமாக்கும். வறண்டு போகாமல் மிருதுவாக வைத்துக் கொள்ளும். எங்களின் அடுத்த பிராடக்ட் குழந்தைகளுக்கான பவுடர் மற்றும் பாடி வாஷ்.

 குழந்தைகள் வளரும் போது அவர்களின் கால் தொடைகளில் மடிப்பு இருக்கும். அதில் வியர்வை காரணமாக சில சமயம் அரிப்பு மற்றும் தொற்று ஏற்படும். அதனை தடுக்க தான் பவுடர் அறிமுகம் செய்தோம். இதில் சோளமாவு கலந்திருப்பதால், சருமத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். அடுத்து பாடி வாஷ். பொதுவா குழந்தைகளுக்கு சோப் தான் வரும். நாங்க அதை மாற்றி வாஷ் போல அறிமுகம் செய்திருக்கோம். இதிலும் மாய்சரைசிங் இருப்பதால், சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதனை ஃபோம் வடிவத்தில் அறிமுகம் செய்திருப்பதால், குழந்தைகளை குளிக்க வைப்பது எளிது’’ என்றவர் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கான காஸ்மெடிக் பொருட்களையும் அறிமுகம் செய்துள்ளார்.

‘‘குழந்தைகள் தான் எங்களின் டார்கெட். ஆனால் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களுக்காகவும் கேட்டனர். அதற்காக தற்போது பன்னீர் மற்றும் பன்னீர் -ஆலோவேரா ஜெல் கொண்ட பேஸ்பேக் அறிமுகம் செய்திருக்கிறோம். இதில் எந்த வகையான ரசாயனங்களும் பயன்படுத்துவதில்லை. மேக்கப் போடுவதற்கு முன் உங்க சருமத்திற்கு நல்ல டோனிங் எஃபக்ட் கொடுக்கும். இதை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு இப்ேபாதைக்கு ஏதும் இல்லை.

ஆனால் பெரியவர்களுக்கு சருமப் பாதுகாப்பு குறித்த பொருட்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும் இப்போது பெரியவர்களுக்கு என்ன தேவை என்று ஒரு ஆய்வு செய்த பிறகு அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து அதற்கு ஏற்ப அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை தேர்வு செய்து அவர்கள் பயன்பெறலாம். தற்போது இது பூனாவில் மட்டும்தான் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தால், இந்தியா முழுக்க டெலிவரி செய்து வருகிறோம். கூடிய விரைவில் இந்தியா முழுக்க மார்க்கெட்டிலும் எங்களின் பொருட்கள் கிடைக்கும் படி செய்ய இருக்கிறோம்’’ என்றார் ஆகன்ஷா.

தொகுப்பு : நிஷா

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!