×

கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்

தா.பழூர்,செப்.5: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க 5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தடுப்பணை கட்டவும், கதவணையுடன்  கூடிய தடுப்பணை கட்டவும், ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை ஒழுங்கு முறையில் தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்யவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தா.பழூர் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஒன்றிய செயலாளர்கள் கவுஞ்சி (கி), வேல்முருகன் (வ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் அன்பழகன், கோடங்குடி ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், பாமக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக தா.பழூர் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலை வந்து ஊர்வலம் நிறைவடைந்தது.  முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்



Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்