×

‘வம்பாகீரப்பாளையத்தில் மீனவர் மர்மசாவு

புதுச்சேரி,  ஆக. 15:  புதுவை வம்பாகீரப்பாளையத்தில் மீனவர்கள் மர்மமாக இறந்த சம்பவம்  தொடர்பாக போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபரிடம்  கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை  வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் (41). மீனவரான இவருக்கு  திருமணமாகி உமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு  பாருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய முருகன் வீட்டில் படுத்து  தூங்கியுள்ளார். நேற்று மீன்பிடி தொழிலுக்கு செல்ல நண்பர்கள் வந்து அவரை  அழைத்தபோது முருகன் எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் உடனே அவரை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற முருகன் நேற்று  பரிதாபமாக இறந்தார். அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
  கடந்த 12ம் தேதி வீட்டின் முன்பு பைக்கை முருகன் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது  அங்கு வந்த உறவினர்களில் சிலர் முருகனின் தம்பி ரவியை தரக்குறைவாக  பேசினார்களாம். இதை அவர் தட்டிக் கேட்கவே ஆத்திரமடைந்த அக்கும்பலில் ஒருவர்  முருகனை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் முருகன் தலையில்  காயமடைந்துள்ளது. அப்போது அதை பெரிதுபடுத்தாத பொதுமக்கள் இருதரப்பையும்  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 எனவே தலையில் அடிபட்டதன்  விளைவால் முருகன் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.  இதுகுறித்து முருகன் மனைவி உமா, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில்  முறையிட்டுள்ளார். அதன்பேரில் முருகன் உடல் கதிர்காமம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  டாக்டர் அளிக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை தகவலின் அடிப்படையில்தான்  முருகன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா? என்பது தெரிய
வரும்.  இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த திலிப் என்பவரை சந்தேகத்தின்பேரில்  தனிப்படை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் வம்பாகீரப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...