×

காரைக்காலில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மலர் அஞ்சலி

காரைக்கால், ஆக.14: காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற, தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதிக்கு மலர் அஞ்சலி மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மலர் அஞ்சலி மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி காரைக்கால் நகராட்சியின் டணால் தங்கவேல் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். புதுச்சேரி தெற்கு பகுதி திமுக அமைப்பாளரும், எம்எல்ஏவுமான சிவா, தலைமை செயற்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான கீதா ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, புதுச்சேரி முன்னாள் முதல்வரும் தற்போதைய சபாநாயகருமான வைத்திலிங்கம், காரைக்கால் திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நாஜிம், முன்னாள் அமைச்சர்கள் சுப்பிரமணியன் (காங்), விசுவநாதன் (இ.கம்யூ), நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரேச குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் கருணாநிதி செய்த சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை நினைவு  கூர்ந்தனர். நாஜிம் கருணாநிதியை பற்றி நினைவு கூர்ந்து பேசும் போது, திடீரென கண்ணீர் சிந்தியவாறு பேச்சை பாதியில் நிறுத்திகொண்டு இருக்கையில் அமர்ந்தார்.

இறுதியில், கலைஞர் கருணாநிதியின் அலங்கரித்த புகைப்படத்திற்கு சர்வ கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரன், விடுதலைச்சிறுத்தை மாநில அர்சியல் குழு செயலாளர் வணங்காமுடி, மதிமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இளங்கோ, தமுமுக மாநில செயலாளர் அப்துல்ரஹீம், மாவட்ட மதிமுக செயலாளர் அம்பலவாணன்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் முகம்மது அலி, தி.க மாநில தலைவர் சிவவீரமணி, புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் தெண்டாயுதபாணி மற்றும் அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள், திமுகவினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...