திருமயம், ஆக. 14: அரிமளத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் மூலம் அரிமளம் வட்டார வளமையத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை ஆர்எம்எஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் ராஜா, அரிமளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரிமளம் வட்டாரக் கல்வி அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார்.
முகாமில் சிறப்பு மருத்துவர்கள் சுப்பு சிவராஜ், சதீஸ், சுமதி, மேகலா தேவி ராதிகா மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்து அடையாள அட்டைகள் வழங்க பரிந்துரை செய்தனர். அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதியை சேர்ந்த 0-18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 192 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ரோஜா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ராஜா, பொன்னுசாமி, அழகுராஜ், மஞ்சுளா ஆகியோர் செய்திருந்தனர். முகாம் முடிவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் 25 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.