×

கருணாநிதிக்கு சிலை வைக்க இடம் வழங்க வேண்டும்

புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் கருணாநிதிக்கு சிலை வைக்க இடம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் திமுகவினர் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக நகர செயலாளர் நைனாமுகம்மது தலைமையில் திமுகவினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த திமுக தலைவர் கருணாநிதியை நினைவுகூறும் வகையில் புதுக்கோட்டை நகரில் பிஎல்ஏ ரவுண்டானா அல்லது அரசு மகளிர் கலைக்கல்லூரி ரவுண்டானா ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலையை நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மணல் கடத்தல் தடுக்க கோரிக்கை: ஆலங்குடி தாலுகா பாலக்குடிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் கொடுத்த மனுவில், மணியம்பலம் தெற்கு வெள்ளாற்று பகுதியில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் பொக்ளைன் இயந்திரத்தின் உதவியுடன் மணல் அள்ளி கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லத்திராக்கோட்டை போலீஸ் நிலையம் மற்றும் ஆலங்குடி தாசில்தாரிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...