×

வடுவூர் அருகே மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் கோப்பையை வென்றது

மன்னார்குடி, ஆக.14: திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற எட மேலையூர் பாண்டியன் கபாடி கழகம் வடுவூர் அருகே உள்ள எடமேலையூரில் கமல் ராஜேஷ் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான சூப்பர் சீனியர் ஆண்கள் பிரிவு கபாடி போட்டிகளை கடந்த இரு தினங்களாக நடத்தியது. இப்போட்டிகளில் சென்னை எஸ்ஆர்எம் அணி, மத்திய தபால் துறை அணி, தென் மண்டல காவல்துறை அணி, மயிலாடுதுறை, சென்னை  விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் அணி மயிலாடுதுறை  விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியையும், மத்திய தபால் துறை அணி தென் மண்டல காவல்துறை அணியையும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தை போஸ் மக்கள் பணியகம் நிறுவன தலைவர் ஜெய்யானந் திவாகரன் மற்றும் பலர் துவக்கி வைத்தனர். இதில்   சென்னை எஸ்ஆர்எம் அணியும் மத்திய தபால் துறை அணியும் மோதின. அனல் பரந்த ஆட்டத்தின் முடிவில் சென்னை எஸ்ஆர்எம் அணி 28 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் மத்திய தபால் துறை அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமாகா வட்டார தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபாடி கழக செயலாளர்  ராஜ ராஜேந்திரன் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர். முடிவில் கலைஞரடியான் நன்றி கூறினார். போட்டிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு  களித்தனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு