×

பட்டாசு ஆலையில் தீ விபத்து 2 பேர் படுகாயம்

சிவகாசி, ஆக. 14:  சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில், பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜான்பாக்கியராஜ் (39) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 8 அறைகள் கொண்ட இந்த ஆலையில் 30க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு சங்குச் சக்கரம், சரவெடி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் தரைச்சக்கர வெடிக்கு மருந்து செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு, வெடி மருந்துகளில் தீப்பற்றியது. இதில், அந்த அறை இடிந்து சேதமடைந்தது.

மேலும் மளமளவென்று மற்ற அறைகளுக்கும் தீ வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் பள்ளப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (32), முருகன் (48) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...