×

சினிமா பாணியில் பட்டப்பகலில் பயங்கரம் வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை: டிரைவரிடம் விசாரணை

சென்னை: மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்ததாரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின்நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், கப்பல் கட்டும் தளம் ஆகிய நிறுவனங்களில் ஒப்பந்ததாரராக இருந்தவர் ஜேம்ஸ்பால் (45). இவர் எண்ணூர் பர்மாநகர் 2வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஜான்சி (40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஜேம்ஸ்பாலுக்கு தொழில் ரீதியாக பலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடிகள் சிலர், ஜேம்ஸ்பாலை பணம் கேட்டு மிரட்டினர். அப்போது பணம் தர மறுத்த அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் பணம் கேட்டு ரவுடிகள் ஜேம்ஸ்பாலை மிரட்டினர். அப்போதும் பணம் கொடுக்க மறுத்த ேஜம்ஸ்பாலுக்கு ரவுடிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஜேம்ஸ்பால் நேற்று காலை வடசென்னை அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் நண்பர்கள் ராஜேந்திரன், மதன் உட்பட 4 பேர் சென்றனர். காரை டிரைவர் ஓட்டினார். வடசென்னை அனல்மின் நிலையம் எதிரே கார் வந்தபோது மற்றொரு காரில் வேகமாக வந்த ஒரு கும்பல், ஜேம்ஸ் பால் காரை வழிமறித்து நின்றது. உடனே, டிரைவர் பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.

அப்போது, ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் மற்றும் காரில் இருந்தவர்கள் கத்தி, அரிவாள், பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி, மின்னல் வேகத்தில் ஜேம்ஸ்பாலின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோருக்கு காலில் வெட்டு விழுந்தது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார், படுகாயம் அடைந்த ராஜேந்திரன், மதனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், ஜேம்ஸ்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஜேம்ஸ்பால் கார் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சினிமா பாணியில் பட்டப்பகலில் ஒப்பந்ததாரர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரில் துப்பாக்கி சிக்கியது
ஜேம்ஸ்பால் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைபற்றியுள்ளனர். அவை யாருக்கு சொந்தமானது எனவும் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...