×

பொள்ளாச்சியில் கனமழை ஒரே நாளில் 100மி.மீ., பதிவானது

பொள்ளாச்சி,ஆக.14:  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. பொள்ளாச்சி நகரில் நேற்று காலை வரை  100மிமீ மழைப்பதிவானது. பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமின்றி சமவெளி பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சிலநாட்களில் பகல், இரவு என இடைவிடாமல் மழை பெய்தது.

 இந்த மாதத்தில் கடந்த வாரம் மீண்டும் பருவமழை பெய்ய துவங்கியது. அதிலும், கடந்த இரண்டு நாட்களாக விடிய,விடிய கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் பெய்ய துவங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த கன மழையால், இந்த ஆண்டில் முதன் முறையாக பொள்ளாச்சி நகர் பகுதியில் அதிகபட்சமாக 100 மில்லி மீட்டர் பதிவானது. இரவு முழுவதும் பெய்த கன மழையால் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் ஆறாக வழிந்தோடியது.  மேலும், உடுமலைரோடு, மார்க்கெட்ரோடு, கோவை ரோட்டில் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் அவதிப்பட்டனர்.

மேலும் மரப்பேட்டை மற்றும் கோட்டூர் ரோடு, ஆச்சிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே வீதிகளில் மழைநீர் தேங்கியதுடன், அங்குள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் நேற்று காலையில், வீடுகளில் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில்  ஈடுபட்டனர்.ஆனைமலை, கோட்டூர், அம்பராம்பாளையம், ராமபட்டிணம், நெகமம், கோபாலபுரம், பொன்னாபுரம், ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், தொடர்ந்து மீண்டும் பெய்த மழையால், நேற்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இரவு பகலாக தொடர்ந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி மழையளவு வருமாறு (மில்லி மீட்டரில்)பரம்பிக்குளம் 38, ஆழியார் 12, மேல்நீரார் 95, கீழ்நீரார் 62, காடம்பாறை 18, சர்க்கார்பதி 7, பொள்ளாச்சி 100,  வேட்டைக்காரன்புதூர் 30.20, மணக்கடவு 54.80, தூணக்கடவு 32, பெருவாரிபள்ளம் 28, அப்பர் ஆழியார் 14, நவமலை 7மிமீ,  நல்லாறு 12மிமீ, பெதப்பம்பட்டி 65.8, நெகமம் 24மிமீ என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு