ஊட்டி: நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், சோலைக்காடுகள் அதிகளவு காணப்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேயிலை செடிகளுக்கு இடையே சோலை மரக்கன்றுகளை நடவு செய்யவும் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, வனத்துறை சார்பில் பல இடங்களில் நாற்றங்கால்கள் அமைத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களை வனத்துறை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள நாற்றுக்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது ஊட்டி அருகேயுள்ள வன ஆராய்ச்சி மையத்தில் நாவல், பிக்கி உட்பட பல்வேறு மரக்கன்றுகளும்,மூலிகை மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, பல்வேறு சோலை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.எனவே, சோலை மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், இங்கு சென்று மரக்கன்றுகளை குறைந்த விலையில் வாங்கி பயன் அடையலாம்.