ராமநாதபுரம்,ஆக.14: ராமநாதபுரம் வெண்குளம் ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளியில் மாவட்ட அளவிலான கோ கோ போட்டி நடைபெற்றது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சிறப்பு விருந்தினராக பாரூக் அப்துல்லாஹ் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் மன்சூர், நூருல்ஹவ்வா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
12 வயதுக்கான போட்டியில் காவேரி இன்டர்நேஷனல் பள்ளியும், 14 வயதுக்கான பிரிவில் மதுரை மகாத்மா பள்ளியும், 17 வயதுக்கான பிரிவில் ஷிபான்நூர்குளோபல் அகாடமி பள்ளியும் முதலிடத்தை பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிஐஜி காமினி பரிசுகளை வழங்கினார். போட்டிக்கு வருகை தந்த அனைத்து பள்ளி சிறப்பு விருந்தினர்களையும் சிறப்பு அலுவலர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் வேலாயுதபெருமாள் வரவேற்றனர். பள்ளியின் முதல்வர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.