ராமநாதபுரம், ஆக.14: விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய்களை மாற்ற அகற்ற வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமநாதபுரம் வாலாந்தரவை ஊராட்சியை சேர்ந்த வழுதியூர், தெற்குக்காட்டூர் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாய நிலங்களில் அமைத்துள்ள எரிவாயு குழாய்களை அகற்ற வேண்டும். குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கேஸ் மற்றும் ஆயில் வெளியாகி வருகிறது. கடந்த 10ம் தேதி பொதுமக்கள் நடமாடக்கூடிய சாலைக்கு அருகில் குடியிருப்பு, விவசாய இடத்தில் குழாய் வெடிப்பு ஏற்பட்டது.
எரிவாயு குழாய்கள் பூமிக்கு ஒன்றரை அடிஆழம் கூட இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகி வருவதால் விவசாய பட்டா நிலங்களில் பதித்துள்ள குழாய்களை அரசுக்கு சொந்தமான இடங்களில் மாற்றி பதிக்க உத்தரவிடவேண்டும். மேலும் ஓஎன்ஜிசி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது,