×

திமுக தலைவர் மறைவுக்கு திரளானோர் மவுன ஊர்வலம் அனைத்து கட்சியினரும் பங்கேற்பு

திண்டுக்கல், ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்காக திண்டுக்கல்லில் நேற்றுமாலை அனைத்துக்கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் அப்துல்கனிராஜா, சிவசக்திவேல், திமுக அவைத்தலைவர் பஷீர்அகமது, தமாகா சார்பில் ராமதாஸ், சந்திரன், அதிமுக. நிர்வாகிகள் மோகன், சுப்பிரமணி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், திமுக துணைச்செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, திராவிடர் கழகம், சமூக நீதிஇயக்கம் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி 95 வயது வரை இருவண்ணக் கொடி பிடித்து பல்வேறு துறைகளிலும் சாதனை செய்தவர் கலைஞர் கருணாநிதி.

என்உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற ஒற்றை உச்சரிப்பின் மூலமாக ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை சிலிர்க்க வைத்த தலைவர் அவர். சட்டமன்ற தேர்தலில் 13முறை போட்டியிட்டு இந்திய வரலாற்றிலேயே இதுவரை யாரும் கண்டிராத சாதனையாக போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியவர் அவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பொறுப்பேற்று 19ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர் என்று திமுக தலைவர் குறித்து பலரும் பேசினர். பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி நாகல்நகர், கணேஷ்தியேட்டர், சோலைஹால்ரோடு, தீயணைப்பு நிலையம், வாணிவிலாஸ் மேடு, பழநிரோடு வழியாக மணிக்கூண்டை வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு